சிவபெருமானின் அட்ட வீரட்டத் தல மகிமைகள்

பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எட்டுத் தலங்களும் அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் ஒவ்வொன்றுக்கும் விசேஷமான மகிமைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவை,

1. திருக்கண்டியூர்
பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில்,

kandiyur

பிரம்மனின் தலையைக் கொய்த இடம்
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர்; அம்பிகை மங்கள நாயகி.
வேண்டுதல்: இத்தல இறைவனை வேண்ட முன்னோர்களின் சாபம், பிரம்மகத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அழகு பெறவேண்டியும், பக்தர்கள் இங்குவந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

2. திருக்கோவிலூர்
வீரட்டேசுவரர் ஆலயம்,

kovilur

அந்தகாசுரனை வதைத்த இடம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம். வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார். இறைவன் வீரட்டேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி.
வேண்டுதல்: அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. காரியத் தடைகள் நீங்க, வீடுகட்டுவதற்கான தடைகள் நீங்க, திருமணத் தடை நீங்க, பூர்வ ஜென்ம பாவங்கள் விலக பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

3. திருவதிகை
வீரட்டானேசுவரர் ஆலயம்

thiruvathigai

திரிபுர அசுரர்களை அழித்த இடம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இறைவன் வீரட்டானேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி.
வேண்டுதல்: இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், உடலில் உள்ள கோளாறுகள், முக்கியமாக வயிறு தொடர்பான பிணிகள் நீங்குகின்றன. எதிரிகள் தொல்லை அகலுவதோடு முன்னோர் செய்த பாவங்களும் தீர்க்கின்றன.

4. திருப்பறியலூர் (கீழப்பரசலூர்)
வீரட்டேசுவரர் ஆலயம்,

thirupariyalur

தட்சனின் தலையைத் துண்டித்த இடம்
காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர். மூலவர்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கொம்பனையாள்.
வேண்டுதல்: இத்தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், அனைத்துவகை தோஷங்கள் நிவர்த்தியாகும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.

5. திருவிற்குடி
வீரட்டானேசுவரர் ஆலயம்,

thiruvirkudi

ஜலந்தரனை வதம் செய்த இடம்
இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது. திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி. இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: ஏலவார்க்குழலி, பரிமளநாயகி. வேண்டுதல்: முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி. வீடு கட்டுவதில் பிரச்னை உள்ளவர்கள் இங்கிருந்து கல் எடுத்துச்சென்று, கட்டுமானத்தில் பயன்படுத்தினால் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.

6. திருவழுவூர்
வழுவூர் வீரட்டானேசுவரர் ஆலயம்,

valuvur

கஜமுகாசுரனை அழித்த இடம்
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர். இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கிளைநாயகி.
வேண்டுதல்: அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண வரம் வேண்டியும் பிரார்த்திக்கலாம். கஜசம்கார மூர்த்தி சந்நிதியின் பின்புறமுள்ள யந்திரத்தை வழிபட பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அகலும்.

7. திருக்குறுக்கை
கொருக்கை வீரட்டேசுவரர் ஆலயம்,

thirukurukkai

மன்மதனை எரித்த இடம்
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை. இறைவன்: வீரட்டானேசுவரர்: அம்பிகை: ஞானாம்பிகை.
வேண்டுதல்: இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும். குழந்தை வரம் வேண்டுவோரும் இங்கு வழிபடலாம்.

8. திருக்கடையூர்
அமிர்தகடேசுவரர் ஆலயம்,

Thirukadaiyur

காலனை சம்கரித்த இடம்
மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்; அம்பிகை அபிராமி.
வேண்டுதல்: இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.

அட்ட வீரட்டத் திருக்கோயில்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு,

இந்த வரிசையில் எட்டு ஆலயங்களையும் தரிசிக்கும்போது, இறைவனின் அருள் நமக்குப் பூரணமாகக் கிடைக்கிறது. வாழ்க்கையில் தடைகள் நீங்கி, அமைதியும் இன்பமும் பெற வேண்டுபவர்களும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பக்திச்சுற்றுலா செல்ல விரும்புகிறவர்களும் சிவபெருமானின் அட்ட வீரட்டத் திருக்கோயில்களுக்கு கண்டிப்பாகப் பயணம் செய்ய வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*